Saturday, November 27, 2010

பொத்தல் கவிதைகள்!

மழைசிந்திய
மாலை வேளையில்
உண்ட மயக்கம்
தெளிந்த சிந்தனையில்
சுவாசிக்க மறந்த
சன்னல் காற்றில்
மரத்தின் கூர்கிளையின்
நுனியிலை சிந்திய
மழைத்துளியில்
தெரிந்த அவளின்
ஒரு முகசாயல்!


சிலவேளைகளில்
சிந்திக்க மறந்த
முற்செடிகளில்
திரும்பவைக்கிறது
என்னையும் கால்வரை!!

சொல்ல மறந்த
கதைகளெல்லாம்
பேச ஆரம்பிக்கிறது
எனது டைரியில்!!


அவளின் கடைக்கண்
பார்வைக்கல்லுக்கு
தப்பிய மாங்காயெல்லாம்
இறந்துகொண்டிருக்கிறது
வெயிலில்!!
 
 
கனவுகளையெல்லாம்
சேகரித்து
பொத்திவைத்த
மூட்டைக்குள்
பொத்தல்!!

Friday, October 29, 2010

துணிமூட்டை!

ஆளில்லாத கடையில்
வடித்துவைத்த மூடக்குறத்திக்கு
மூக்கில்லாத குறையை
தீர்த்துவைத்தது நேற்றடித்து மீதியாகியிருந்த
நீர்த்த கால்சியம் கார்பனேட்

எத்துணைபேர் கண்பட்டும்
சிலையாய் நின்றிருந்த அவளின்
பார்வையென்னை ஈர்த்தநொடியில்
அவளின் உண்மைநிலையறிந்து
தூக்கியெறியப்பட்டேன் வெறும் குப்பையாய்
இன்று அவள் கல்லானாதால்...

காற்றுபுக நடுங்கும் அந்த பெருங்கடையில்
கடைந்தெடுத்த துணிமூட்டையாய்
கிடக்கிறேனென மூலையில்
அழுதுகொண்டிருந்தது போன
தீபாவளிக்கு வந்திருந்த புத்தாடைகள்!!

கவிதைன்னா இப்படி தான் சம்பந்தமில்லாம எழுதனுமாம்

Friday, September 17, 2010

ஓர் இலை!!

எங்கோ விசியெறிந்த
விதைகள் அனாதையாய்
ஆதாரவாய் அள்ளிப்பொழிந்த
மழைத்துளியில்
பிறப்பெடுத்து நெடுமரமாய்
ஓங்கியுயர்ந்த மரந்தனில்
இலை நடத்தும் நாடகங்கள்
பசுமைமாறி பழுங்கதையாகி
மீண்டும் முளைக்கிறது
அடுத்த கிளைநுனியில்...........

விட்டில் பூச்சி!

சூரியன் ஓடி
பனி தொடங்கும் வேளை
சில்லென்ற காற்றோடு
மறைந்துபோகும் புழுக்கங்கள்

சுவாசத்தோடு திடத்தையும்
ஈர்த்துக்கொண்டு
சுயக்கூடுகள் தேடி ஒளியும்
பறவைக்கூட்டங்கள்

சூரியஒளியில் ஆட்டம்போட்டு
சிரித்த பூவிலைக்கொடிகள்
சூழ்ந்துகொண்டு தூங்கும்
அந்திக்காலம்

இருட்டின் கையில்
சிக்கிவிடக்கூடாதென
சாலைவெளிகளில் அலைந்து
திரியும் மக்கள் கூட்டம்

இருட்டும் வேளைக்களுக்காய்
காத்திருந்து மாயவெளிச்சத்திற்காய்
தங்களைமறந்து திசை தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கும் விட்டில்
பூச்சிகள் மாட்டிக்கொண்டன
அவள் பரபரக்கும் கயல்விழிகளில்....

Monday, August 16, 2010

கட்டிடங்கள்

தொழிலாளியும் முதலாளியும்
கைகோர்த்த உழைப்பினில்
வளர்ந்துவிட்ட கட்டிடம் மட்டும்
கட்டிடமல்ல

அறிவையும் அறிவியலையும்
கடைந்து கூர்மையாய்
திரித்தெடுத்து செங்கல்கற்களையும்
மணலையும் செம்மையாய் கலந்து
செதுக்கிய சிற்பமாய் நிற்க
வேண்டுமே கட்டிடம்

சிலையாய் மட்டுமில்லை
எமது கட்டிடக்கலையின்
சிறப்பு வரலாறாயும் வளர்ந்து
அதிஅறிவியலும் சிதைக்க
முடியாமலும் சிரித்துநிற்க
வேண்டுமே எங்கள் கட்டிடம்

ஆன்றோரெல்லாம்
ஆயகலைகளை அறிந்தரிந்து
கட்டியிருந்தாலும் அவர்கள்
அவையங்களையனைத்தும் சொல்லி
காலங்காலமாய் நிலைத்துநிற்கும்
கட்டிடக்கலை ஒன்றே

படிபடியாய் முன்னேற்றிய கற்களை
மாமலையாய் ஓங்கிநிற்கச் செய்யும்
என் கட்டிடக்கலைஞனுக்கு
பிரம்மனும் ஈடில்லை

வர்ணிக்க வார்த்தைகளின்றி
வானுயரம் மேம்பட
வடிக்கும் எங்கள் கலைஞனின்
அறிவுத்திறனையும் சொக்கவைக்கும்
கட்டிடக்கலையின் கைத்திறம்.




Wednesday, July 21, 2010

நீ இல்லாத இடமேயில்லை......

அழகாய் அடுக்கப்பட்ட 
பைல்களினூடே 
கவர்ந்திழுக்கும் உன் பார்வை பார்த்தும் 
கட்டி இழுத்த காந்தம் போல் ஒட்டி இருந்தோம்  
உன் பார்வையிலிருந்து நானும் 
என் பார்வையிலிருந்து நீயும் 

சில கணங்கள் நம் பார்வை 
சற்றும் விலகாமல் நான் எழுதிய
மெளனமொழிகளுக்கு அர்த்தம் 
கண்டுபிடிக்க மனத்திரையில் 
ஆயிரமாயிரம் அகராதிகளை 
தேடித்தவித்துக்கொண்டிருந்தது 

அடுத்த நொடியில் நீ சிணுங்கியபோது 
பதறிப்போன என் மனம் 
உடைப்பட்ட சில்லுகளாய் 
சிதிலமடைய ஆயத்தமாகியிருந்தது 

உன்னை கைப்பிடியில் அடக்க 
நினைக்கும் என் எண்ண 
வேலிகளுக்கிடையில் 
உன் கயல்விழிப்பார்வைகளும் 
அதனோடு சேர்ந்த இமைகளின் 
ஓட்டங்களும் 


என் வெப்பமான மூச்சு
காற்று தெறித்த வேகங்களில்
உன் நாசிகளின் மேல்பட்டு
நீ துடித்த வேளைகளும்
சிலிர்ப்படைந்து புல்லரித்த
உன் மயிர்ச்சோலைகள்
தவித்த தவிப்புகளும்
என்னை ஈர்த்ததுன் மையல்களில்

இன்னும் விட்டுவைக்கவா 
எண்ணுவேன் உன்னை 
எடுத்தேன் அந்த ஸ்பேரையை 
தெளித்த நொடியில் 
மாண்டுபோனாயே என் அழகிய 
கரப்பான்பூச்சியே!!

















Saturday, June 26, 2010

பிட்டு தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

என் இனிய அன்பு
பிட்டுத்தோழிக்கு...

எட்டு நாளில் சிநேகம்
கலந்துறவாடிய
அறிமுகம் மட்டுமே


அங்கே நீ
இங்கே நான்
நமக்குள் ஏதும் பிணைப்பில்லை
இந்த படிப்பினைத்தவிர

பதினாறு மணி நேர
வகுப்புகளில்
பாடத்தை கவனித்ததைவிட
பாதி தூங்கிவழிந்தும்
மீதி நமக்குள் சிணுங்கிய
கலாய்த்தல்களும்!!

வகுப்புகள் மட்டுமே நம்மை
தோழிகளாக்கி விடவில்லை
எக்ஸாமில் பிட்டும்
பிணைத்துவிட்டது

நாமெழுதிய முதல் தேர்வில்
தயக்கங்களில்லாமலும்
மறைவுகளில்லாமலும்
உன் காகிதத்திரையில்
ஓடிய அத்தனை எழுத்துக்களும்
நம் தலையெழுத்தாய் மாறிய
பெருமை உன்னையே சாரும்

பழகிய காலங்களை விட
நம்மை நாம் நினைத்துக்கொண்ட
நாட்களே அதிகம்

கடந்தநாட்களில் உன்னை நான்
அறியவில்லை
அறிந்த நாள் முதல் உன்னைபிரிய
மனமில்லை தோழியே!

அடுத்து வரவிருக்கும்
தேர்வுகளில்
நீயே எங்கள் பிட்டு
தெய்வமாய் அருள்புரிவாய்!!

நீ காணும் அனைத்து
நாட்களும்
வெற்றிநாட்களாகவும்
எதிர்காலம் உன் வசப்படவும்
என் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் கடவுளின் கருணையால் மகிழ்ச்சியாக வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!