நீ இல்லாத இடமேயில்லை......
அழகாய் அடுக்கப்பட்ட
பைல்களினூடே
கவர்ந்திழுக்கும் உன் பார்வை பார்த்தும்
கட்டி இழுத்த காந்தம் போல் ஒட்டி இருந்தோம்
உன் பார்வையிலிருந்து நானும்
என் பார்வையிலிருந்து நீயும்
சில கணங்கள் நம் பார்வை
சற்றும் விலகாமல் நான் எழுதிய
மெளனமொழிகளுக்கு அர்த்தம்
கண்டுபிடிக்க மனத்திரையில்
ஆயிரமாயிரம் அகராதிகளை
தேடித்தவித்துக்கொண்டி
அடுத்த நொடியில் நீ சிணுங்கியபோது
பதறிப்போன என் மனம்
உடைப்பட்ட சில்லுகளாய்
சிதிலமடைய ஆயத்தமாகியிருந்தது
உன்னை கைப்பிடியில் அடக்க
நினைக்கும் என் எண்ண
வேலிகளுக்கிடையில்
உன் கயல்விழிப்பார்வைகளும்
அதனோடு சேர்ந்த இமைகளின்
ஓட்டங்களும்
என் வெப்பமான மூச்சு
காற்று தெறித்த வேகங்களில்
உன் நாசிகளின் மேல்பட்டு
நீ துடித்த வேளைகளும்
சிலிர்ப்படைந்து புல்லரித்த
உன் மயிர்ச்சோலைகள்
தவித்த தவிப்புகளும்
என்னை ஈர்த்ததுன் மையல்களில்
இன்னும் விட்டுவைக்கவா
எண்ணுவேன் உன்னை
எடுத்தேன் அந்த ஸ்பேரையை
தெளித்த நொடியில்
மாண்டுபோனாயே என் அழகிய
கரப்பான்பூச்சியே!!